குழந்தை கடத்தல் - சென்னை பெருநகர காவல்துறை
குழந்தை கடத்தல் - சென்னை பெருநகர காவல்துறை புதிய தலைமுறை
தமிழ்நாடு

‘குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்’ - சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை

ஜெனிட்டா ரோஸ்லின்

குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் அதிகளவு நடப்பதாக பரவும் காணொளிகள் சமூகவலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இவை பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை பெருநகர காவல்துறை தரப்பில், “இது போன்ற காணொளிகளை கண்டு மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில், ”சமீப காலமாக சில நபர்கள். குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது.

இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும். பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்து கொள்கிறது.

இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை கடத்தல் தொடர்பான போலி வீடியோக்கள் - காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.