கோவி செழியன் web
தமிழ்நாடு

”யு.ஜி.சி. புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிக்கின்றன..” - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்

யு.ஜி.சி. புதிய திருத்தப்பட்ட விதிகள் மாநில உரிமைகளை பறிக்கின்றன என்றும், மத்திய அரசின் கைப்பாவையாக யு.ஜி.சி. உள்ளது எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார்.

PT WEB

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ‘உயர்கல்விக்கான வரைவுக் கொள்கை 2025’ஐ வெளியிட்டார். இந்த வரைவுக் கொள்கையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது.

மேலும், துணைவேந்தர் நியமனத்திற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவின் விதிமுறைகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி துணைவேந்தர் நியமனம் தொடர்பான தகுதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இதை செயல்படுத்தாத பல்கலைக்கழகங்கள் யுஜிசியின் திட்டங்களில் பங்குபெற முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யு.ஜி.சி

இந்நிலையில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன்மூலம் துணை வேந்தர்களை நியமிக்கும் முழுமையான அதிகாரத்தை ஆளுநருக்கு கொடுத்துள்ளதாக மாநில அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்தது.

மாநில உரிமைகளை பறிக்கின்றன..

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு வெளியிட்டுள்ள யுஜிசி-2025 வரைவு திருத்த நெறிமுறைகளை வெளியிட்டு மாநில கல்வி உரிமைகளை கைவிட வேண்டும் என்பதை காட்டியுள்ளது. யு.ஜி.சி. திருத்த அறிக்கையை அமல்படுத்த கூடாது, திரும்ப பெற வேண்டும். அடிப்படை கல்வி முதல் உயர்க்கல்வி வரை மத்திய அரசு பல்வேறு இடர்பாடுகளை செய்து வருகிறது. பல்வேறு‌ மாநிலங்களை கொண்ட இந்தியாவில் கல்வியை நிர்வகிக்க அந்தந்த மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையை பறிக்கும் வகையில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகள் உள்ளது. பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. மூலம் கைப்பற்ற மத்திய அரசு நினைக்கிறது.

துணைவேந்தர் நியமனத்தில் இதுவரை உள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் அதிலும் யு.ஜி.சி‌. தலையிட்டுள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் துணைவேந்தரை நியமிக்கும் முடிவு தவறானது. யு.ஜி.சி. மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. கல்வித்துறை சாராத நபர்கள் துணை வேந்தர் பதவிக்கு வரலாம் என்பது முற்றிலும் தவறானது. இது பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை என்பது தவறானது..

மேலும் பேசியவர், டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம் என்பது ஏற்புடையது அல்ல. தொழில் கல்வியில் இருந்து பொதுக் கல்விக்கு மாணவர்கள் மாறி படிக்கலாம் என்பது தவறானது. ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை படிக்கலாம் என்பது கண்டிக்கத்தக்கது. இது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உயர்க்கல்வியில் தமிழ்நாட்டில் முதலிடம். அகில இந்திய அளவில் உயர்க்கல்வியில் இந்தியா 28 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு 48 சதவீதம்... புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் பட்டங்கள் செல்லாது. அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தமிழக உயர்க்கல்வித்துறை கலந்து கொள்ள முடியாது என சொல்கிறார்கள். யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை தமிழ்நாடு போன்று கேரளா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் எதிர்த்துள்ளது.

கோவி செழியன்

இதனை கடைசி வரை நாங்கள் எதிர்த்து போராடுவோம், இது குறித்து 5-2-2025 தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாநில கல்விக்கொள்கை திட்டப்படி அனைவரும் இதனை எதிர்த்து மெயில் அனுப்ப உள்ளோம். தந்தை பெரியார் போன்று நிச்சயமாக போராடி இதில் வெல்வோம். துணைவேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவது யார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆளுநருக்கு ஒரு எல்லை உண்டு அதைத்தாண்டி செயல்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம்.. அனைத்திற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று பேசியுள்ளார்.