செய்தியாளர் - m.மீரா
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம், தமிழகத் திட்ட மேம்பாட்டு மானிய நிதியின் சார்பில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையில் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான அழைப்பு கடந்த 2025, ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் உள்ள தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ள விளம்பரம் வெளியானது.
மொத்தமுள்ள பணிகளை மூன்று தொகுப்புகளாகப் பிரித்து, ஒரு தொகுப்பிற்கு 1.35 கோடி ரூபாய் மதிப்பில் இந்த டெண்டர் கோரப்பட்டிருந்தது.
அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது .
ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும், தினக்கூலிப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளிலும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தத் தனியார்மய முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
இதன் காரணமாக தனியாருக்காக நிறுவனங்களை நியமிக்கும் டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அரசின் இந்த டெண்டர் ரத்து நடவடிக்கை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில், தமிழக அரசின் இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தின் அடித்தளத்தில் பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மக்களே பெரும்பான்மையாக, தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் நிலையில், அவர்களது நிரந்தரப் பணியையும், ஊதியத்தையும் பறிப்பதற்காகவே இந்த பி.பி.பி. முறை செயல்படுத்தப்படுகிறது.
எனவே, இதனை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த நியாயமான கோரிக்கைக் குரலுக்கு மதிப்பளித்து, டெண்டரை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது; நன்றி தெரிவிக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு லாப நோக்கத்திற்காக அல்ல; மக்களுக்கு தரமான பொது சேவைகளை வழங்குவதற்காகும். எனவே, பொதுச் சேவைகளில் தனியார் மயக் கொள்கைகளுக்கு இடமளிக்காமல், நிரந்தர பணியாளர்களின் மூலம் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது'