உயிரிழந்த ராட்சத மீன்
உயிரிழந்த ராட்சத மீன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திடீரென கரை ஒதுங்கிய ஆழ்கடலில் வசிக்கும் ராட்சத மீன்.. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழப்பு!

யுவபுருஷ்

குமரி மாவட்டம் வள்ளவிளை கடற்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அந்த வகையில், மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ததயபுரம் பகுதியில் மீன்பிடிப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத மீன் ஒன்று அலையோடு கரை சேர்ந்தது.

ஆழ்கடல் பகுதியில் வாழும் இந்த மீன், கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் அதனை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிட முயன்றனர். இந்த மீன் வகை குறித்து மீனவர்கள் கூறும்போது, “ஆழ்கடல் பகுதியில் மட்டும் காணப்பட்டு வரும் திமிங்கிலம் இனத்தை சேர்ந்த வெள்ளுடும்பு மீன்” என்று தெரிவித்தனர்.

இந்த ராட்சத மீனை கரையில் இருந்து கடலுக்குள் அனுப்பிவைக்க மீனவர்கள் தொடர்ந்து போராடியது மட்டுமல்லாமல், குலசேகரம் தீயணைப்பு துறையினரும் பல மணிநேரமாக போராடினர். நீண்ட நேரமாக போராடியும், ராட்சத மீன் கடலுக்குள் போகாமல் கரையிலேயே இருந்ததால், பரிதாபமாக உயிரிழந்தது.

கடற்கரை பகுதியில் அரிய வகை மீன், உயிரிழந்த நிலையில், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய பிறகு, இந்த மீனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் கூறப்படுகிறது.