முதன்முறையாக தமிழில் வெளியான அமெரிக்க கவிஞர் மாயா ஏஞ்சலோவின் படைப்புகள்

"படைப்புகளில் மாயா ஏஞ்சலோ மையப்படுத்தும் சகிப்புத்தன்மை, நீதி மற்றும் சமத்துவம் தென்னிந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள‌ தமிழ் வாசகர்களிடம் சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம்”
maya angelou books in tamil
maya angelou books in tamilpt

கருப்பர் வரலாற்று மாதம் மற்றும் மகளிர் மாதத்தை குறிக்கும் வகையில், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், நடிகை மற்றும் மக்கள் உரிமை செயல்பாட்டாளர் என்று பன்முகத்திறமையுடன் ஜொலித்த மாயா ஏஞ்சலோ எழுதிய இரண்டு புத்தகங்களின் முதல் அதிகாரபூர்வ தமிழ் பதிப்பை சென்னையில் உள்ள‌ அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

அனைத்து தரப்புக்குமான முன்னேற்றம், மகளிர் மேம்பாடு மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவாக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய‌ மாயா ஏஞ்சலோவிற்கு அமெரிக்காவின் உயரிய விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கத்தை 2010-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து சென்னையில் உள்ள‌ அமெரிக்க துணைத் தூதரகம், மாயா ஏஞ்சலோவின் இரண்டு முக்கிய படைப்புகளை தமிழில் வெளியிட்டுள்ளது.

மாயா ஆஞ்சலோவின் தன் வரலாற்று தொகுப்பான “கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத்தெரியும்", புனைகதை சாராத பிரிவில் விற்பனையில் சிறப்பிடம் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணின் முதல் படைப்பாகும். “என்றாலும் நான் எழுகிறேன்” என்ற கவிதை தொகுப்பு 32 கவிதைகளை உள்ளடக்கியது. பிரபலமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

“கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத்தெரியும்" புத்தகத்தை பெர்னார்ட் சந்திராவும், “என்றாலும் நான் எழுகிறேன்” புத்தகத்தை ஆர். சிவகுமாரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

அமெரிக்க மையத்தின் கலையரங்கில் இன்று(மார்ச் 15) நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற‌து. இதில் பங்கேற்ற, அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகத்தின் ஊடக மற்றும் பொது உறவு நயப்பிரிவு துணை இயக்குநர் ஆன் சேஷாத்ரி பேசியதாவது,

“மாயா ஏஞ்சலோ படைப்புகளின் மொழிபெயர்ப்பு பல்வேறு மொழிகளில் வந்திருந்தாலும், அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு ஏதும் தமிழில் வரவில்லை. பதிப்பாளர்களுடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றி, சென்னை அமெரிக்க துணைத்தூதரகத்தின் பொது உறவு நயப்பிரிவு இந்த மொழிபெயர்ப்புகளை சாத்தியமாக்கியுள்ளது. படைப்புகளில் அவர் மையப்படுத்தும் சகிப்புத்தன்மை, நீதி மற்றும் சமத்துவம் தென்னிந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள‌ தமிழ் வாசகர்களிடம் சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

தொடர்ந்து, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தி மற்றும் எழுத்தாளர், சமூக ஆர்வலர் சல்மா முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது உறவு நய அமைச்சக ஆலோசகர் குளோரியா பெர்பனா, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்தின் பொது உறவு நய அலுவலர் ஸ்காட் ஹார்ட்மன், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சமந்தா ஜாக்சன், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாயா ஏஞ்சலோ

முனைவர் மாயா ஆஞ்சலோவின் (1928-2014) இயற்பெயர் மார்கரெட் ஆன் ஜான்ஸன். இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர், பாடகர், சுயவரலாற்றாசிரியர் மற்றும் மனித உரிமை போராளி. ஏழு சுயவரலாற்று நூல்களை எழுதியிருக்கும் ஏஞ்சலோ, மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

இவரது படைப்புகள் நாடகங்களிலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மதிப்புறு முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். 2000ம் ஆண்டில் கலைகளுக்கான தேசிய விருதைப் பெற்றவர், 2010-ல் அமெரிக்காவின் மிக உயரிய விருதான விடுதலைக்கான அதிபரின் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com