திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் ஏரியில் நேற்று நீர்வரத்து இல்லாத நிலையில் காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 629 கனஅடியாகவும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 94 கனஅடியாகவும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 1,290 கனஅடியாகவும், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 40 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து காலை நிலவரப்படி 713 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21.18 அடியை எட்டியுள்ளது. ஏரியின் நீர்இருப்பு தற்போது 2,903 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் துணை ஏரிகள் நிரம்பி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது. அதில், “சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டியில் நீர் வரத்து உயர்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 1.30 மணியளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 95,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பல இடங்களில் உடைந்தது. பாலங்கள் உடைந்தது, சாலைகள் துன்டானது இப்படி பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ள கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கரை ஓரத்தில் உள்ள மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மஞ்ச குப்பம், குண்டு உப்பலவாடி பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கன அடி தான் தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மழை தொடருவதால் கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.