காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் Pt web
தமிழ்நாடு

”தேவராஜ சுவாமி கோவில்., முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்” - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்.!

கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PT WEB

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து அந்த ஆசிரமம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அறநிலையத்துறை தரப்பில் பேசிய வழக்கறிஞர், காஞ்சி காமகோடி பீடம் - சங்கர மடம், ஸ்ரீ அகோபில மடம், நாங்குநேரி ஸ்ரீ வாணாமலை மடம், மைசூர் ஸ்ரீ பரகால ஜீயர் மடம், உடுப்பி ஸ்ரீ வியாசராயர் மடம், சோசலே ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அறநிலையத்துறையின் கருத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது" எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்ந்து, மடாதிபதிகளுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலைய சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக அறநிலையத் துறை அதிகாரியை அணுகி நிவாரணம் கோரலாம் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.