பிரசவ வலியால் துடித்தப்பெண் மற்றும் காப்பாற்றிய காவலர் கோகிலா pt web
தமிழ்நாடு

"நான் படித்த படிப்பு உதவியது!" பிரசவம் பார்த்து உயிர்காத்த பெண் காவலர்! ஆட்டோவில் நடந்த அற்புதம்!

வாகனச்சோதனையின் போது பிரசவ வலியால் துடித்தப் பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திருப்பூர், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில், ஆட்டோவில் பயணித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண், பிரசவ வலியால் துடித்து கதறியுள்ளார்.

உடனடியாக ஆட்டோவை நிறுத்தி விசாரித்தபோது, அப்பெண் பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு செல்வது தெரியவந்தது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பிரசவம் ஆகிவிடும் என்ற நிலை ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோகிலா, ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். கோகிலா ஏற்கனவே நர்சிங் படிப்பை முடித்து எட்டு மாதங்கள் பயிற்சி பெற்றிருந்ததால், அவரால் பிரசவத்தை வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது.

மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர்.

நள்ளிரவில் விரைந்து செயல்பட்டு தாய், சேய் இருவரின் உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர் கோகிலாவின் செயலைப் பாராட்டி, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார். இது குறித்துப் பேசிய கோகிலா, தான் படித்த நர்சிங் படிப்பு இச்சூழ்நிலையில் உதவியது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகக் கூறினார்.

கோகிலாவின் சொந்த ஊர் சேலம் என்றும், தற்போது திருப்பூர் எம்ஜிஆர் நகரில் தங்கி, காவல் பணியில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் தனது தந்தை ராஜா இப்போது இல்லை என்றும், தாய் ஜெயந்தி மற்றும் அக்கா தம்பியுடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.