மகளை கொன்ற பெற்றோர்
மகளை கொன்ற பெற்றோர் புதியதலைமுறை
தமிழ்நாடு

காதலை கைவிட மறுத்த மகளை கொலை செய்து ஏரியில் வீசிய தந்தை.. காணவில்லை என்று காவல்நிலையத்தில் நாடகம்!

யுவபுருஷ்

செய்தியாளர் - ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பட்டவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (37) - மீனாட்சி தம்பதி. இவர்களின் 16 வயதான மகள், பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையே, இவருக்கும் முத்தாலி கிராமத்தை சேர்ந்த சிவா என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இதுதொடர்பான புகாரின் பேரில் கடந்த 2022ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார் சிவா. தொடர்ந்து, சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, சிவாவும் - பிரகாஷின் மகளும் மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. விஷயம் தெரிந்த பெற்றோரும், மகள் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே காதலித்தபோது கண்டித்து, சிறைக்கு அனுப்பி வைத்த பின்பும் காதலித்த சிவாவை மறக்க முடியாத அவர், கடத்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி அவருடன் பயணித்ததாக தெரிகிறது. இந்த விஷயம் தெரிந்த பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். இதெல்லாம் சரி வராது என்று கூறியபோது மகளுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், ஆத்திரத்திரமடைந்த தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி மற்றும் பெரியம்மா மீனாட்சி ஆகியோர் சேர்ந்து மகளை அடித்துக்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, அவரது சடலத்தை பாகளூர் ஏரியில் வீசிவிட்டு, காணவில்லை என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஏரியில் மிதந்த பிரகாஷ் மகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா, சம்பவத்தன்று மறைக்கப்பட்டதால், தங்களது பாணியில் விசாரணையை முடுக்கிய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. ஆம், மகள் காதலை கைவிட மருத்ததால்தான் மகளை அடித்து கொலை செய்து ஏரியில் வீசியதாக தந்தை பிரகாஷ் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து, சிறுமியின் தந்தை, அம்மா மற்றும் பெரியம்மாவை கைது செய்த போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். காதலை கைவிட மறுத்த மகளை, பெற்றோரே அடித்துக்கொலை செய்துவிட்டு ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.