இளம் பெண்ணை மீட்டு வரும் போலீசார்
இளம் பெண்ணை மீட்டு வரும் போலீசார் pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: மகளை கடத்தி சென்ற தந்தை; கர்நாடகாவில் சுற்றிவளைத்து மீட்ட போலீஸ்; பதற்றத்தில் கிராமம்

webteam

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு[21]. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், அதே கிராமத்தில் வசித்து வரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண்ணை பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் பெண்ணின் பெற்றோர், மகளைக் காணவில்லை என அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி தியாகு, மற்றும் நர்மதாவை கண்டுபிடித்து, வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர், பெண்ணின் விருப்பப்படி, நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைத்தனர்.

தியாகு

இதனைத்தொடர்ந்து, தியாகுவிற்குப் பெண்ணின் பெற்றோர் மற்றும் அண்ணன்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் தியாகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், மனைவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்குச் சென்றுள்ளார். தியாகு வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த நர்மதாவின் பெற்றோர், மற்றும் அவருடைய உறவினர்கள், தியாகுவின் வீட்டிற்குச் சென்று தியாகு மற்றும் அவரின் பெற்றோரைத் தாக்கிவிட்டு நர்மதாவை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தியாகு, தனது மனைவி நர்மதாவை அவரது உறவினர்கள் கடத்தி சென்றதாகக்கூறி அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நர்மதாவை தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தனிப்படை போலீசார் நர்மதாவை மீட்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நர்மதாவின் தந்தை உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.