விஜயகாந்த், மறைந்த நடிகரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமானவர், 2ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது வள்ளல் குணம் மற்றும் அன்பு மனம் நினைவுகூரப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்தில் ஏராளமான மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தேமுதிக சார்பில் குருபூஜை அனுசரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதிபலன் பாராமல் கொடுக்கும் வள்ளல் குணம்... கேளாமல் உதவிசெய்யும் அன்பு மனம்.. இதுதான், மறைந்த நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் அடையாளம். இன்று அவருடைய 2ஆம் ஆண்டு நிறைவு தினம்..
இன்றைய தினத்தை ஒட்டி தேமுதிக சார்பில் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான மக்கள், தொண்டர்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
80-களின் தொடக்கம் தான் அவரின் சினிமா அறிமுகம். 1979ல் இனிக்கும் இளமை மூலம் திரையுலகம் நுழைந்த அவரை, 1980ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை வெற்றி நாயகனாக்கியது. அதுமுதல் 2015 வரை சுமார் 35 ஆண்டுக்காலம் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம்வந்தவர், விஜயகாந்த்.
90களில் உச்சநட்சத்திரங்கள் வரிசையில் பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த விஜயகாந்த், இயல்பாகவே உதவும் குணம்கொண்டவர். தனது ரசிகர் மன்றங்களின் வாயிலாக பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
அடுத்தடுத்து பலகட்டங்களில் அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிட்டு வந்த அவர், 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தைத் தொடங்கினார். அதன்பின் நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் என அரசுப் பதவிகளை அலங்கரித்தார்.
திரைத்துறை பங்களிப்பிற்காக கலைமாமணி, சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள விஜயகாந்த் ,பசி என வருவோருக்கு ருசி நிறைந்த உணவு வழங்கி மகிழ்வார் என திரைத்துறையினர் மட்டுமல்லாது பலரும் பாராட்டுவர்.
செய்நன்றி மறவாதன்மை, வேண்டுவோருக்குத் தேடிச்சென்று உதவும் பண்பு, இளமைக்காலம் தொட்டு நட்புக் கொண்டிருந்தவர்களை அரவணைத்துச் சென்ற பாங்கு என விஜயகாந்திற்கு புகழ் சேர்க்கும் நல்லவை பல உண்டு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், 2023ஆம் ஆண்டு இதே நாளில் உலகைவிட்டு பிரிந்தாலும், நினைவுகளால் ரசிகர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.