மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் சித்திரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு தனிப்படை காவலர்களின் மனைவியர்கள், திருப்புவனம் காவல் நிலையத்தில் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லாமல், மேலதிகாரியின் உத்தரவை பின்பற்றியே விசாரணை நடத்தினர் எனக் கூறி, கைது செய்யப்பட்ட ஆறு காவலர்களின் குடும்பத்தினர், காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"எங்களின் கணவர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக அஜித் குமாரை விசாரிக்கவில்லை. மேலதிகாரிகள் கொடுத்த உத்தரவின்படியே விசாரணை நடத்தினர். இன்று ஆறு காவலர்களும் சிறையில் உள்ளனர். அவர்களின் குடும்பங்கள் தவிக்கின்றன. எங்களது குழந்தைகள் அப்பா எங்கே எனக் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்வது யார்? என காவலர்களின் மனைவிகள் கண்ணீருடன் கேட்டனர். ஒரு அதிகாரியின் உத்தரவை நிறைவேற்றியதற்காக ஆறு குடும்பங்களை அழிக்கலாமா? அரசு, காவல்துறை அதிகாரிகள், மற்றும் அரசியல் கட்சிகள் எங்களுக்காக பேச மாட்டார்களா?" என்றனர்.
இன்று இந்த ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாளை இது மற்ற காவலரின் குடும்பத்திற்கும் நடக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களின் மனைவிகளும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். உத்தரவிட்ட மேல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கீழ்மட்ட காவலர்களையே பலியாக்கக் கூடாது என்றும் கூறி, நீதிக்காக போராடுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அரசு விளக்கம் மற்றும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.