செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் வினோத் (30) – பிரியா (25) தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகன் பிரத்திவினு உடன் வசித்து வந்துள்ளனர். காதலித்து வந்த இவர்கள் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தம்பதியினருக்கிடையே குடும்பத் தகராறு இருந்த வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பிரியா, தான் பணிபுரியும் பனியன் கம்பெனியில் தங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், இன்று அதிகாலை தனது முதலாளிக்கு 'தான் இறந்து போய் விடுவேன் இதனை தனது தாய்க்கு தெரிவிக்கும்படி' குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்த ரஞ்சித், உடனடியாக வினோத்தின் தாய் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, 5 வயது மகனை கொலை செய்து விட்டு வினோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு காரணமாக பெற்ற மகனை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.