செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா கடந்த எட்டாம் தேதி நடைபெற்றது. இதற்காக ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் அவ்வழியாக வந்த காரை மறித்துள்ளார். அதில் இருந்த கருங்கல்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பிரபாகரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மதுபோதையில் இருந்ததும் காவல் துணை கண்காணிப்பாளரிடம் தகராறில் ஈடுபட்டதோடு அடிக்க கையை ஓங்கியதாகக் கூறப்பட்டுகிறது.
இதனையடுத்து பணிக்கு காலதாமதமாகவும் மதுபோதையிலும் வந்ததாக காவலர்கள் இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.