திமுக தரப்பில் தற்போதுதான் விருப்ப மனு வழங்கும் பணி தொடங்கும் நிலையில் அதிமுக தரப்பில் விருப்ப மனு வழங்கி அவர்களிடம் நேர்காணலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி முடித்துள்ளார். இதையடுத்து, அதிமுகவின் முதல் வேட்பாளர்பட்டியலை 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தவிர, தேர்தல் அறிக்கை மற்றும் பிரசாரம், விருப்ப மனு உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை அதிமுக தலைமையில் பாஜக, தமாகா, அன்புமணியின் பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக - காங்கிரஸ் மோதலுக்கு மத்தியில் அக்கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜயின் தவெகவும் தனித்துக் களம் காண்கின்றன. இதனால், நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக மிக தீவிரமாகவும் வேகமாகவும் நடத்தி வருகிறது.
திமுக தரப்பில் தற்போதுதான் விருப்ப மனு வழங்கும் பணி தொடங்கும் நிலையில் அதிமுக தரப்பில் விருப்ப மனு வழங்கி அவர்களிடம் நேர்காணலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி முடித்துள்ளார். இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி அதிமுக அலுவலகத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் அணி சார்பிலும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அன்று அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை முடியவில்லை என்றாலும் அதிமுகவுக்குத்தான் இந்த தொகுதி என நிச்சயம் உள்ள தொகுதிகளுக்கான பட்டியலாக அது இருக்கும் என கூறப்படுகிறது.