முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி web
தமிழ்நாடு

’கலைஞரை ஸ்டாலின் கைதி போல வைத்திருந்தார்..’ ஆ.ராசா பேசியதாக வைரலாகும் ஆடியோ! EPS விமர்சனம்!

திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக சமூகவலைதளத்தில் ஒரு ஒலிப்பதிவு ஆடியோ வைரலாகி வருகிறது.

Rishan Vengai

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடும் பிரசாரம் நடக்கும் நிலையில், திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் திமுகவில் சாதி பாகுபாடு, கனிமொழிக்கு காட்டிய அக்கறை தமக்கில்லை, கலைஞரை இறுதிக் காலத்தில் ஸ்டாலின் கைதி போல வைத்தார், கட்சியை கைப்பற்றினார் என குற்றச்சாட்டு எழுப்பியதாக கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி திமுக, ஸ்டாலினை கடுமையாக தாக்கி வருகிறார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.

EPS

ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக சமூகவலைதளங்களில் வலம்வரும் ஆடியோ குறித்து விமர்சித்து பேசினார்.

கலைஞரை கைதி போல வைத்திருந்தார்..

இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, ஆ.ராசா பேசியதாக சமூகவலைதளங்களில் வைரலாகும் ஆடியோ குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ஒரு ஆடியோ ஒன்னு சமூகவலைதளத்துல வைரலாகிட்டு வருது. அதுல என்ன பேசியிருக்குனு நான் இங்க வெளிப்படுத்துறன். அது யார் பேசுனது உங்களுக்கெல்லாம் தெரியும், யாரு ஆ.ராசா. அவர் பேசிய ஆடியோ இணையத்துல வைரலா பரவிவருது.

அதுல, திமுகவினர் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ஆ.ராசாவுக்கு காட்டவில்லை. கனிமொழி கைதாகும் வரை ஆ.ராசாவை கட்சியினர் யாரும் எட்டிப்பார்க்கவில்லை என ஆதங்கப்படுகிறார். அதில் சொல்றார், சமூக நீதிப்பேசும் திமுகவில் சாதிய பாகுபாடு இருப்பதாக அப்பட்டமாக ஒப்புக்கொள்கிறார். கலைஞர் டிவிக்கு பணம் சென்றதை ஆ.ராசா ஒப்புக்கொள்கிறார்.

கலைஞரின் இறுதிக் காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியை போலத்தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றிவிட்டார் என்கிறார் ராசா. எவ்ளோ மோசம், இதை யார் சொல்றாரு திமுகவில் இருக்கும் எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் சொல்கிறார்.

திரு ஸ்டாலின் அவர்களுடைய அப்பா கலைஞரை இறுதிக்காலத்தில் கைதியை போல வைத்திருந்தார் என்று திரு ராசா பேசிய ஆடியோவில் சொல்லப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதிக்காலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதன் காரணமாகவே கனிமொழிக்கு சட்டமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை, கனிமொழியை ஒருநாளும் ஸ்டாலின் நம்பமாட்டார் என்று அந்த செய்தியில் சொல்கிறார்.

என்னை எப்போதும் கட்சியிலிருந்து வெளியே தள்ள முடியாது, என் செல்வாக்கு, என் கம்யூனிட்டி, என் அறிவு என்று எதையும் வெளியே தள்ள முடியாது என்று ராசா பேசியது வைரலாக பரவிவருகிறது.

இதைவைத்து பார்த்தால் ஸ்டாலின் அவருடைய அப்பாவை கைதியை போலவே வைத்திருந்துள்ளார். சொந்த அப்பாவையே அப்படி வைத்திருந்தவர், நாட்டு மக்களை என்ன பாடுபடுத்துவார்’ என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார்.