அதிமுக தொகுதிப் பங்கீடு Pt web
தமிழ்நாடு

சுமுகமாக முடிந்த அதிமுக தொகுதிப் பங்கீடு.. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டி?

அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுக்குக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் இன்றைக்குள் முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 1 மாத காலமே இருக்கும் சூழலில், 23 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, 1 மாதத்திற்கு மேலாக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. எனினும் அதிக கட்சிகள் காரணமாக விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. அதேசமயம், திமுக கூட்டணிக்கு முன்னதாகவே கூட்டணியை உறுதி செய்துவிட்ட அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காமலேயே இருந்து வந்தது. இதற்கு, தங்களது கூட்டணிக்கு தவெகவை இணைக்கும் முயற்சியே காரணமாக கூறப்பட்டது. ஆனாலும், தவெக தலைவர் விஜய் இக்கூட்டணியில் இணைய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கே. பழனிசாமி - பியூஷ் கோயல்

இந்தச் சூழலில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வைச் சந்தித்தனர். அங்கு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு உறுதியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதையடுத்து, இந்தப் பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இன்றைக்குள் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

அதிமுக கூட்டணி

மேலும், 234 இடங்களில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் எனவும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்ட பிறகு, அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமாக, ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், அக்கட்சிகளுக்கும் இன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.