சமூக முன்னேற்றத்துக்கு அரசியல் பங்களிப்பு மிக முக்கியமானது என்ற இலக்கோடு மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் விவி சுவாமிநாதன். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வில்வராயநல்லூரில், 1927ஆம் ஆண்டில் பிறந்தவரான விவி சுவாமிநாதன், பள்ளிப் பருவத்திலேயே அரசியல் ஈடுபாட்டோடு திகழ்ந்தவர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவியதற்காக பிரிட்டிஷ் காவல் துறையால் தேடப்பட்டவர். நாட்டுப் பற்று சூழ்ந்திருந்தாலும், விவி சுவாமிநாதனுடைய சிந்தனையைச் செதுக்கியது திராவிட அரசியல்தான்.
திராவிட மாணவர் இயக்கத்தின் முதல் மாணவர் செயலாளர் என்ற பெருமை சுவாமிநாதனுக்கு உண்டு. பெரியார், அண்ணா வழியில் தன்னை வளர்த்துக்கொண்ட விவி சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற விவி சுவாமிநாதன், சட்டக் கல்வியை முடித்ததும் சிதம்பரத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1964இல், தமது 37ஆவது வயதில், சிதம்பரம் நகராட்சியின் முதல் தி.மு.க. நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
நகராட்சித் தலைவராகச் சிறப்பாகக் குடிநீர் வழங்கியதற்காகவும், புதை சாக்கடைத் திட்டம், குடிசை வீட்டு வரி நீக்கம் போன்ற முன்னோடிப் பணிகளுக்காகவும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதிலும், முதல்வர் பக்தவச்சலத்திடமிருந்து விருது பெற்றார். பெரியார், அண்ணா வழியில் பயணப்பட்ட விவி சுவாமிநாதன் எம்ஜிஆர் மீது பெரும் பற்று கொண்டிருந்தார். அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரை வைத்து கார் பரிசளித்ததில் சுவாமிநாதனுக்கு முக்கியப் பங்குண்டு.
அதிமுகவின் சார்பில் நின்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் ஆன விவி சுவாமிநாதன் எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற தளகர்த்தர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஒரு கட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு, இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை, கைத்தறி என்று 13 முக்கிய இலாகாக்களை இவர் வசம் ஒப்படைத்தது, எம்ஜிஆர் இவர் மீது வைத்திருந்த மதிப்புக்கான சான்று.
தில்லை நடராஜர் கோவிலில் முதன்முதலாகத் தேவாரம், திருவாசகம் பாடச் செய்தது; ஆசியாவிலேயே உயரமான திருவரங்கம் கோவில் திருப்பணி செய்தது; பிச்சாவரத்தை உலக சுற்றுலா மையமாக உயர்த்தியது; தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் சோழமாதேவியின் சிலைகளை வழக்குத் தொடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டது; கிராம நிர்வாக அலுவலர் பணியைக் கொண்டுவரக் காரணமாக இருந்தது எனப் பல முன்னோடி பணிகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தவர்; இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றிய காலகட்டத்திலும் தமிழக உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர்; தன்னுடைய அமைச்சகப் பணிகளுக்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்டவர் விவி சுவாமிநாதன்! தமிழக அரசியலில் ஆழமான முத்திரைகளைப் பதித்தவர் விவி சுவாமிநாதன்!