தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட வழக்கில், குளத்தூர் போலீசார் ஆறு தனிப்படைகள் அமைத்து 400க்கும் மேற்பட்டவர்களை விசாரித்து, சிசிடிவி ஆதாரத்தின் மூலம் தர்மமுனீஸ்வரனை கைது செய்தனர். நீதிமன்றம் அவரை குற்றவாளி என நிரூபித்து இரட்டை தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17வயது பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த மார்ச் மாதம் அங்குள்ள காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும்பணி நடைபெற்றது.
400க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தர்மமுனீஸ்வரன் தான் குற்றவாளி என போலீஸார் கண்டுபிடித்தனர். முந்தைய குற்றவழக்கில் நிபந்தனை ஜாமீனில் அவர் கையெழுத்திட வந்தபோதே கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தர்மமுனீஸ்வரனை குற்றவாளி என்று உறுதிசெய்த நீதிமன்றம் அவருக்கு இரட்டை தூக்கு என்ற தண்டனையை விதித்துள்ளது.