திமுக - காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்தகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்றுவரும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற குரலைத் தொடர்ந்து எழுப்பி வந்த காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 39 தொகுதிகளும் 2 மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுகவை வலியுறுத்தி வந்தது. ஆனால் அவ்வளவு தொகுதிகள் கொடுக்க முடியாது எனவும் 25+1 மட்டுமே தரமுடியும் எனவும் திமுக தரப்பு வலியுறுத்தியது. இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இருவரும் முதல்வர் ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில், கூட்டணி குறித்தும் தொகுதிப்பங்கீடு குறித்தும் சுமுகமாக பேசி முடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், எத்தனை தொகுதிகள் என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை. அதேநேரத்தில், இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று (மார்ச் 4) மீண்டும் காங்கிரஸ் - திமுக இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என தகவல் வெளியானது. அதன்படி, இன்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்கள் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு இருதரப்புக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் வரும் தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட உள்ளது.