அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை - கனிமொழி கண்டனம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“அண்ணா பல்கலை. நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது” - திமுக எம்.பி. கனிமொழி!

அண்ணா பல்கலை. சம்பவத்தில் ஒருவர் கைதாகி உள்ள நிலையில், “இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது” என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்து!

ஜெ.நிவேதா

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர், மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகி உள்ள ஞானசேகரனுக்கு வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தன் எக்ஸ் தளப்பதிவில், “சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” என்றுள்ளார்.

முன்னதாக, கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகி என்றொரு தகவல் பரவிய நிலையில், அதை மறுத்து அமைச்சர் கோவி செழியன் நேற்று பேட்டிக் கொடுத்திருந்தார். இருப்பினும் எதிர்க்கட்சியினர், ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என கூறி வருகின்றனர். இதற்கிடையே, மாணவி கொடுத்த புகாரின் விவரங்களை, காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மாணவியின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், அவரின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது.