வேளாண் பட்ஜெட் நாளில் கருப்பு சட்டை அணிந்து வந்ததற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் அருகில் நிற்க திமுக எம்.எல்.ஏக்கள் இடையே நடந்த உரையாடலில், மைக் ஆன் செய்ததை மறந்து “எவ்ளோ நாள் சேகர் பாபுவே” என திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன் கூறிய சம்பவம், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தொடர்ந்து ஸ்டாலின், உதயநிதி அருகில் முன்னிலை பெறுவதால் சக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்ற விமர்சனத்தையும், சந்திரசேகரன் மீதான புதிய சர்ச்சையையும் தூண்டியுள்ளது.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே தவெக அரசின் பட்ஜெட்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து வேளாண் பட்ஜெட் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கவிருந்தார். இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலினின் அருகில் நிற்க திமுக எம்.எல்.ஏக்கள் முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் இடத்தில் குவியத்தொடங்கினர்.
சிறிது நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் அருகில் நிற்பது தொடர்பாக திமுக எம்.எல்.ஏக்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது ஊடகங்களின் மைக் ஆன் செய்யப்பட்டது தெரியாமல், திருவையாறு திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் 'எவ்ளோ நாள் சேகர் பாபுவே' என்று கூறினார்.
உடனே தான் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்தி மைக் இருப்பதை உணர்ந்து, தான் கூறவந்ததை முடிக்காமல் நிறுத்திக்கொண்டார். அதோடு அங்கிருந்த சக திமுக எம்.எல்.ஏக்களும் மைக் அங்கு இருப்பதை அவருக்கு நினைவு படுத்தினர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பெரும்பாலும் அவர்களின் அருகில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவே உடன் இருப்பார். இந்த சூழலில் திமுக எம்.எல்.ஏ ஒருவரே இந்த கருத்தை கூறியது திமுகவில் சேகர் பாபு முன்னிலை படுத்தப்படுவதை திமுகவின் சக எம்.எல்.ஏக்களே விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜயை கிண்டல் செய்யும் விதமாக முகபாவனையை கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.