முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜயை ஒருமையிலும், ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தியும் பேசியிருந்தார். இதையடுத்து, முதல்வர் குறித்து அவதூறாக அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதாக மீது தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் கோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனுவை நேற்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தசூழலில் தான், நேற்று ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது காவல்துறை. தொடர்ந்து, சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர். அதன் பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதி சிதம்பரம் உத்தரவிட்டார்.
மேலும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆத்தூர் காவல் நிலையத்தில் பத்து நாட்கள் கையிழுத்திட வேண்டும் என்றும், நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருந்த அனிதா ராதாகிருஷ்ணன், ”திமுகவைச் சேர்ந்தவர்களை எந்த விதத்திலும் மிரட்டி பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றார்கள். நான் அங்கு இருக்கும் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேருங்கள்; நாங்கள் உதவி செய்கிறோம் என்றார்கள். தாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். இன்றைக்கு வந்த கட்சிக்கு நாங்கள் பயப்பட வேண்டுமா? தலைவர் தைரியமாக இருக்க கூறி இருக்கின்றார். அந்த தென்போடு எந்தவித பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
எனினும், தவெகவில் சேர வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் நிர்மல் குமார், தவம் இருந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்க்க மாட்டோம் எனவும் முதல்வர் விஜய் காலில் விழுந்து கெஞ்சினாலும் அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றார். தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை இருக்கும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், காவல் துறை தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் விஜய்க்கு சிறந்த ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம். அனிதா ராதாகிருஷ்ணனை ராஜிநாமா செய்ய யாரும் வற்புறுத்தவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.