திமுக அமைச்சர் அன்பரசன், விஜயை விமர்சித்து, தம்மா துண்டு பையன் எனக் குறிப்பிட்டார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் திமுக தான் தங்களுக்கு போட்டி என கூறும் நிலையில், அன்பரசன், மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், வெறும் பிரபலத்தன்மை போதாது எனவும் தெரிவித்தார்.
விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையிலும் தொகுதிப் பங்கீடு பற்றிய ஒப்பந்தங்களிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தேர்தல் அறிக்கைகளும் வெளியிட்டு வருகின்றன.
இந்தசூழலில் வாக்கு அரசியலில் முதன்முறையாகக் களம் காணவுள்ள விஜய தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் எனவும், திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே தான் போட்டியென்றும் பரப்புரை செய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த திமுக நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பரசன், தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசியுள்ளார்.
நேற்று நடந்த திமுக நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பரசன், முந்தானத்து பொறந்த ஒருவர் நாங்க தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி சுத்திக்கிட்டு இருக்காரு. எவன் எவனையோ நம்ம பார்த்திருக்கிறோம். நம்மள அழிச்சிடுவேன் ஒழிச்சிடுவேன்னு சொன்ன பலபேரை பார்த்தோம். தற்போது தம்மா துண்டு பையன் வந்து எங்களுக்கும் திமுக காரனுக்கும் தான் போட்டின்னு சொல்ற உன்னை பார்க்க மாட்டோமா? நாங்க.
காஞ்சிபுரத்தில் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளை காக்கா வந்தது. கால்நடை மருத்துவர்கள் அதை கூண்டில் போட்டு வைத்திருந்தார்கள். அந்த வெள்ளை காக்காவை பார்ப்பதற்கு 3 1/2 கிலோ மீட்டர் லைனில் நின்றார்கள். அதே போல தான் இவன் எல்லாம். ஒரு நடிகரை சினிமாவில் பார்க்கிறவர்கள் நேரில் எப்படி இருப்பான் என்று பார்க்க வருவார்கள். பார்த்துவிட்டு போவான். ஏடிஎம்கேயிலிருந்து போவான். ரோட்டில் போறவன் எல்லாம் போவான். அதனால அவருக்குத்தான் ஓட்டு போடுவான் என்று நினைக்காதே. ஜனங்களோட பல்ஸ் எங்களுக்கு தெரியும்" என்று கூறினார்.