மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 வென்று ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். அதேபோல, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பல கட்சிகளும் தேர்தல் தோல்விக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகி தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன.
இந்தச்சூழலில் தான், திமுக தோல்விக்கு ஜென் சி இளைஞர்களை ஈர்க்கத் தவறியதும், அக்கட்சியின் பதவிகளில் இளைஞர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதுமே காரணமாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் தோல்விக்கு பிறகு சட்டமன்ற தொகுதி வாரியாக கள ஆய்வு பணிகளும் கட்சியின் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகள் திமுக தலைவரிடம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. ஏற்கனவே, இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 78 ல் இருந்து 110 வரை உயர்த்தப்பட உள்ளதாகவும், கட்சியின் கட்டமைப்புகள் மாற்றும் செய்யும் அதிரடியான ஆலோசனைகள் முன் மொழியப்பட்டு தீவிரமாக விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
அந்தவகையில் தான், இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, திமுக கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45. மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயம். பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60. நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முக்கியமாக, மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல, ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் மூன்று முறை பதவி வகிக்கலாம் என தீர்மானம் திருத்தப்பட்டிருக்கிறது.
மேலும், திமுகவின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.