ராகுல் - ஸ்டாலின் web
தமிழ்நாடு

திமுகவிடம் உள்ள முக்கிய அஸ்திரம்.. பணிய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ்?

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சு வார்த்தை இன்று நடைபெற்று முடிந்து இருக்கும் நிலையில் காங்கிரஸை பணிய வைக்கத் தேவையான ஒரு அஸ்திரம் திமுகவிடம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பார்க்கலாம்.

Praveen Joshva L

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா அல்லது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி சேருமா என்ற பரபரப்பு நிலவி வந்தது. மேலும், காங்கிரஸ் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் பேசிய பேச்சுகள் பல்வேறு வதந்திகளுக்கும் வழிவகுத்தது. இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் திமுக பேச்சுவார்த்தை குழுவினரோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

செல்வப்பெருந்தகை

அதன்பின்னர் பேசிய செல்வப்பெருந்தகை, ”மாநிலங்களவை சீட் தர முதலமைச்சர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், திமுகவை தவிர வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தொடர மாநிலங்களவை சீட்தான் முக்கியக் காரணம் என்றும், இதனை வைத்தே திமுக - காங்கிரஸை வழிக்கு கொண்டுவந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 5 காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது.

இதனால் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 22-ஆக குறையும். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற மொத்த இடங்களில் 10 சதவீத இடங்கள், அதாவது 25 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 இடங்களுக்குக்கீழ் வந்தால் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியிடம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகவும் வாய்ப்புள்ளது. வரும் மார்ச் மாதம் 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் கர்நாடகாவில் இருந்து 3 உறுப்பினர்களும், தெலங்கானாவில் இருந்து ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் மாநிலங்களவைக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சியால் முடியும்.

மல்லிகார்ஜுனா கார்கே

அதே நேரம் இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கரில் இருந்து காங்கிரஸ் தனது உறுப்பினர்களை அனுப்ப முடியும் என்றாலும் அங்கு உத்தரவாதமான சூழல் இல்லாத நிலை நிலவுகிறது. இதன் காரணமாக திமுகவிடம் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் பெற்றால் மாநிலங்களவையில் 25 இடங்களுக்கு மேல் பெற்று காங்கிரஸ் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்க உறுதியான சூழல் ஏற்படும். இந்த மாநிலங்களவை இடத்தை வைத்தே திமுக, காங்கிரஸ் கட்சியுடன் தனது கூட்டணியை இறுதி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.