செல்லூர் ராஜூ web
தமிழ்நாடு

”திமுகவின் குறைகள் இது தான்..” - பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

PT WEB

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டு, அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து கூறினார். அவர், திமுக ஆட்சியில் வரி அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை மக்களை பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களுக்கு நன்மை தரும் எனவும், திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், வாக்குசேகரிப்பு நிகழ்வுகள், தேர்தல் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு போன்ற தேர்தல் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அந்தவகையில் தான் இன்று, மதுரை முனிச்சாலை சந்திப்பில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக சார்பில், 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார். பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 உதவி தொகை, அனைவருக்கும் அம்மா இல்லம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து, 150 நாட்கள் வேலைத் திட்டம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 25,000 மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நோட்டீஸில் இடம்பெற்றிருந்தன.

செல்லூர் ராஜூ

தொடர்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில், "விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது. திமுக ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால் மக்களுக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபேன் போட்டால் மின் கட்டணம் அதிகரிக்கும் என மக்கள் ஃபேனை கூட போட தயக்கம் காட்டுகிறார்கள். இந்தநிலையில், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்கிறோம். அதிமுக சொல்வதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும். ஆனால், இனி அதிமுக சொல்லாதையும் செய்யும்.

திமுக ஆட்சியில் புதிது புதிதாக ஊழல் செய்யப்பட்டது. அலைகாற்றில் கருணாநிதி 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார். தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து உள்ளனர். 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் கூட இல்லாமல் அண்ணன் ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவார் என கனிமொழி கூறினார்.

டாஸ்மாக்

திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் தற்போது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமுக 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்துள்ளது. ஆனால், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1 மருத்துவ கல்லூரி கூட கொண்டு வரவில்லை" என பேசினார்.