திமுக கவுன்சிலர்
திமுக கவுன்சிலர் புதியதலைமுறை
தமிழ்நாடு

“என் சொந்தக்காரர் கிட்டயே வரி வசூலிப்பியா”-நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்

யுவபுருஷ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் 30 வது வார்டு திமுக கவுன்சிலர் லதா என்பவரின் உறவினர் ஒருவர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நகராட்சிக்கு கட்ட வேண்டிய வரி பாக்கியை அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் வரி பாக்கியை வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர். அப்போது, நகராட்சி அதிகாரிகளுக்கும், கடை நடத்தி வருபவதற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, “உரிய வரி பாக்கியை செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வெளியேறவதை தடுப்போம்” என அதிகாரிகள் எச்சரித்து வந்ததாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த 30 வது வார்டு திமுக கவுன்சிலர் லதா, நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் அங்கு சென்ற அவர், “மார்க்கெட் பகுதிக்கு சென்று எனது உறவினரிடம் எப்படி வரிவசூல் செய்யலாம்” என நகராட்சி ஆணையரிடமும், ஊழியர்களிடமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிதம்பரம் நகராட்சி தற்போது திமுக வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.