விஜயகாந்த்
விஜயகாந்த் கோப்புப்படம்
தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

ஜெ.நிவேதா , ஜெனிட்டா ரோஸ்லின், Angeshwar G

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தரப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அவருக்கு வயது 71.

அரும்பாடுபட்டு தனிமனிதராக கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைத்த நல்ல மனிதரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவினை சற்றும் எதிர்ப்பார்க்காத குடும்பத்தினரும் தொண்டர்களும் ரசிகர்களும் சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விஜயகாந்த் காலமானார் - மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்த் மறைவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்” என்று தெரிவித்துள்ளது.

தனிமனிதராக அரும்பாடுபட்டவர்

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ். தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே கனவு.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார்.

விஜயகாந்த்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

திரைவாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், மிகப்பெரிய வெற்றிகள் என பலவற்றை பார்த்த விஜயகாந்த் புரட்சிக் கலைஞர், கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்ற கட்சியைத் துவங்கி, 2006 ஆம் ஆண்டு விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவு, ஆனார். 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆனால் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது.

இப்படி தனி ஒரு மனிதராக அரும்பாடுபட்டு கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த மாபெரும் மனிதர்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவருடைய மறைவு, அவருடைய குடும்பத்தை மட்டுமன்றி, மொத்த ரசிகர்களையும் தொண்டர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் உலுக்கியுள்ளது.