செய்தியாளர்: V.M.சுப்பையா
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை என புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.