செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (58), சுமதி (56) தம்பதியர். இவர்கள் இருவரும் பாலமேட்டில் உள்ள உறவினர்களை சந்தித்துவிட்டு மீண்டும் நத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோமணம்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து ராஜேந்திரனை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.