சென்னை உயர்நீதிமன்றம் web
தமிழ்நாடு

சாதகமான தீர்ப்புக்கு ரூ.50 லட்சம்.. மூத்த வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு.. விலகிய நீதிபதி!

மோசடி வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருகிறேன் என்றும், அதற்கு நீதிபதிக்கு பணம் கொடுக்க வேண்டும் என குற்றம் சாட்டபட்ட நபர்களிடம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் எழுந்துள்ளது.

PT WEB

ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான மோசடி வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் ஒருவர் ரூ.50 லட்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

கடந்த 2008-09ஆம் ஆண்டு இந்திய உலோகம் மற்றும் கனிமங்கள் வர்த்தக கழகத்திடம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு சுமார் ரூ.113.38 கோடி அளவுக்கு ஏமாற்றி மோசடி செய்ததாக, நரேஷ் பிரசாத் அகர்வால் மற்றும் கணேஷ் அகர்வால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நரேஷ் பிரசாத் அகர்வாலும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கணேஷ் அகர்வாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

50 லட்சம் பெற்ற மூத்த வழக்கறிஞர்..

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது, இந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற, நீதிபதிக்கு கொடுக்க வேண்டுமென ரூ.50 லட்சத்தை பெற்றதாக இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரான முரளிகுமரன் மீது ஒரு புகார் வந்தது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் இந்த புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து மத்திய சட் டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு அந்த புகார் நீதிபதியின் கவனத்துக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூத்த வழக்கறிஞர் முரளிகுமரனை நீதிபதி விசாரித்தார். இந்தச் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இதுதொடர்பாக தனக்கு எதிரான எந்த விசாரணையையும் தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன் மூத்த வழக்கறிஞர் மீது குற்றம்சாட்டி மனு அனுப்பிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நீதித் துறையின் கண்ணியத்துக்கு ஊறுவிளைவிக்கும் இது போன்ற கடிதத்தை புறம்தள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி எம் நிர்மல் குமார் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் பணம் வாங்கினாரா என்று சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டு, இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தான் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.