stalin, eps, veerapandian web
தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா..? ”கூடாது பிழை என்று சொன்னோம்..” - சிபிஐ வீரபாண்டியன்

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற நிலையில், திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

Rishan Vengai

தமிழக அரசியலில் விஜயின் தவெக 35% வாக்குகளுடன் 108 இடங்களில் வெற்றி பெற்று, திமுக-அதிமுக இருமுனைப் போட்டியை உடைத்த வரலாற்றுத் தேர்தல் பின்னணியில், கூட்டணி ஆட்சி பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதே நேரத்தில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களில் வந்த தகவல்கள் குறித்து பதிலளித்துள்ளார்.

தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிய தவெக 35% சதவீதம் வாக்குசதவீதத்தை பதிவுசெய்து 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக வரலாறு படைத்தது. 1967-க்கு பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சி அல்லாமல் 3வதாக ஒரு கட்சி தனிம்பெரும்பான்மை பெருவது இதுவே முதல்முறை.

தவெக மாநாடு விஜய்

108 இடங்களில் வென்றபோதும் தவெகவிற்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரினர்.

இந்தசூழலில் தான் தவெகவிற்கு எதிராக திமுகவும், அதிமுகவும் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கவிருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முன்மொழியப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் வெளியான செய்திகளுக்கு மாறாக இடதுசாரிகள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளும் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாகவும், அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர். இடதுசாரிகள் ஆதரவை பெற்றபிறகு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

இந்தசூழலில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை பேசப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், “இதற்கான பதிலை நீங்கள் அவர்களிடம் தான் கேட்கவேண்டும். சில உரையாடல், சில கருத்து எல்லாவற்றையும் சொல்லிட முடியாது இல்லையா, வெளியில் அது கருத்தாக வரும்போது அதன்மீது நாம் கருத்து சொல்லலாம். இது ஊடகங்களில் வெளிவந்தது தானே, அது எங்களுக்கு ஏற்புடையதாக அல்ல, எங்களிடம் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோதும் நாங்கள் அதை மறுத்திருக்கிறோம், கூடாது பிழை என்று சொல்லியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக தான் உங்களை பின்னிருந்து இயக்குகிறதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அதெல்லாம் வெறும் கணிப்பு மட்டுமே, எப்பொழுதுமே ஸ்டாலின் எங்களின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டதில்லை. தமிழக முதல்வராக இருந்தபோதும் கட்டளையிடும் போக்கில் செயல்பட்டதில்லை. ஜனநாயகமுறைப்படி மட்டுமே உரையாடியிருக்கிறார். அவரை குறைசொல்வதை ஏற்பதிற்கில்லை” என்று பேசியுள்ளார்.