உயிரிழந்த வேல்முருகன்
உயிரிழந்த வேல்முருகன் புதியதலைமுறை
தமிழ்நாடு

உயிரிழந்தவரின் உடலை வைக்க இடமில்லை...தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு மாற்றப்பட்ட உடல்!

PT WEB

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நடுத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(54). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏரல் பகுதிக்கு அவரது உடலைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அந்த உடல் வைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அரசு மருத்துவமனையில் 18 உடல்கள் வரை குளிர்சாதனக் பிணவரை கிட்டங்கியில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது 18 உடலுக்குமேல் அங்கு இருப்பதால், வேறு வழியில்லாமல் வேல்முருகன் உடலை பாதுகாப்பாக வைக்க கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால், அரசு மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் குளிர்சாதன பிணவறை கிட்டங்கிகளுக்கு உடல்களை அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.