அமைச்சர் பொன்முடி pt web
தமிழ்நாடு

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு - அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், பெண்களையும், சைவ மற்றும் வைணவ சமயங்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

பொன்முடி

அப்போது அமைச்சர் பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். மாலை இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நான்கைந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நீர்த்துப் போகச் செய்யாமல் ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் குறிப்பிட்டார்.

court order

பின்னர் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்றைய தினம் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.