மாணிக்கம் தாகூர், விஜய், ஆதவ் அர்ஜுனா ANI
தமிழ்நாடு

வார்த்தையைவிட்ட மாணிக்கம் தாகூர்.. விஜய் குறித்த கருத்தால் சர்ச்சை.. கூட்டணியில் குழப்பம்?

முதல்வர் விஜய் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியுள்ள கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை கைப்பற்றியது. பின்னர் காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியைப் பிடித்தது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்தச் சூழலில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும் ஒரு பாரத பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறினார். அவர் முதல்வர் விஜயை குறிப்பிட்டே அப்படிச் சொன்னதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.

எனினும் தவெக தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் ஆவார் என தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்தச் சூழலில் பிரதமர் போட்டியில் விஜய் என வெளியாகும் செய்தி காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது, அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்பது வெறும் யூகம் மட்டுமே. அதற்குப் பதிலளிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.

இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், விஜயை அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார், மேலும், தொண்டர்கள் என்னையும் பிரதமர், மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என முழக்கமிடுகிறார்கள், அதை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை என்றும், தமிழகத்தில் இந்த ஆட்சி அமைய முதலில் ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும் கூறியுள்ளார்.

manickam tagore

அமைச்சர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆளும் தவெக அரசின் கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவரே கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.