மாணிக்கம் தாகூர் - உதயநிதி ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

"காங்கிரஸ் நிர்வாகி தாக்குதல்; திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும்" - மாணிக்கம் தாகூர் கண்டனம்!

தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக 59 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், அக்கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பதுடன் அக்கட்சியின் அமைச்சரவையிலும் பங்கேற்றிருக்கிறது. இந்தசூழலில் தான், கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், திமுக - அதிமுக கூட்டணி பேசப்பட்டதாலேயே அக்கூட்டணியில் இருந்து யாரிடமும் தெரிவிக்காமல் வெளியேறியதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

தவெக - காங்கிரஸ்

இதைத் தொடர்ந்து, இரு கட்சி தொண்டர்கள் இடையேயும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்‌ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறித்து திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான அரசியல் பழிவாங்கலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது, மக்கள் தேர்தலில் நிராகரித்த பிறகு பொறுமையை இழந்து வரும் ஒரு கட்சியின் அகந்தையையும் சகிப்புத் தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது.

அரசியல் ரீதியாக பதிலளிக்காமல், அமலாக்கத்துறை விசாரணைகளை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டவும் தாக்கவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தலைவர் சஹாயராஜ் உடனடியாக இந்த விவகாரத்தை நகர காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். உதயநிதியின் தலைமையில், வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. காங்கிரஸ் அமைதியாக இருக்காது. இந்த கோழைத்தனமான அரசியலை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்; இந்த வன்முறை சக்திக்கு எதிராக உறுதியாக நிற்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.