p.chidambaram
p.chidambaram pt desk
தமிழ்நாடு

“மோடி அரசின் சாதனை வேலை இல்லாமையும், விலைவாசி ஏற்றமும்” - தேர்தல் பரப்புரையில் ப.சிதம்பரம் பேச்சு

webteam

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்...

வாஜ்பாய் பல நன்மைகள் செய்தார்:

“பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். சுதந்திரம் இருக்கும் போதுதான் சுதந்திரத்தை காப்பாற்ற முடியும். பாஜகவில் வாஜ்பாய் இருத்திருக்கிறார். பல நன்மைகள் செய்தார், சில தவறுகளும் செய்திருக்கலாம். ஆனால், மோடி எந்த நன்மைகளையும் செய்யவில்லை. இந்தியாவை இந்துத்துவா நாடாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர்’ என சர்வாதிகார போக்குடன் அறிவிக்க உள்ளனர்.

ப.சிதம்பரம்

‘மாநில கட்சிகளை ஒடுக்க வேண்டும், காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் திட்டம்’

ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு அம்பேத்கரின் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கிடையாது. இந்தியாவில் மக்கள் சமத்துவமாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்களை இரண்டாம் கட்ட மக்களாக பார்க்கிறார்கள். இந்தியாவை இந்துத்துவா நாடாகவும், பல வர்ணங்கள் உள்ள நாடாகவும் மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. அதற்கு மாநில கட்சிகளை ஒடுக்க வேண்டும், காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்-ன் திட்டம்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது மோடி வந்தாரா?

இந்த தேர்தலில் மிகுந்த கவனத்துடன் மக்கள் வாக்களிக்க வேண்டும். மோடி அரசு, அதிமுக அரசு, திமுக அரசு என ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ₹6000 கோடி பயிர்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தின் கூலி ₹400-ஆக உயர்த்தப்படும். 10 ஆண்டு கால ஆட்சியில் மோடி என்ன செய்தார்? சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, மோடி வந்தாரா? இப்போது 5 நாட்கள் வரப்போகிறாராம். தமிழ்நாட்டு மக்கள் துன்பத்தில் இருந்த போது ஏன் வரவில்லை. தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை.

ப.சிதம்பரம்

“கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது”

வேலை இல்லாமை, விலைவாசி ஏற்றம் இவையே மோடியின் சாதனை. தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதி கேட்கிறார். இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என மோடி கூறினார். ஆனால், வேலைவாய்ப்பு வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கச்சா எண்ணெய் விலை குறைகிறது, ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்:

காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த போது பள்ளிக் கூடமா, சமையல் கூடமா என கேட்டனர். ஆனால் அதன்பின் மதிய உணவு திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதேபோல காலை உணவு திட்டமும் ஒரு நாள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். அதற்கு மத்தியில் பாசிச அரசு அகற்றப்பட வேண்டும்” என்று பேசினார்.