தவெக - காங்கிரஸ் web
தமிழ்நாடு

தவெக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்.. காங்கிரஸ் கட்சி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

தவெகவுக்கு 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது ஜனநாயகத்துக்கு விரோதம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது .

PT WEB

தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய வரவான விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், 5 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் தனது ஆதரவினை நேற்று தெரிவித்தது அதனையடுத்து தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்திருக்கிறது.

Vijay

மேலும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கேட்டுவருகிறது. அதேசமயம், தவெக முக்கிய நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகை சென்ற விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரினார். எனினும், ஆளுநர் தரப்பில் இருந்து பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் பெயர் பட்டியலை கொடுத்த பிறகே ஆட்சி அமைக்க அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார். எனினும், ஆளுநர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தசூழலில், அரசமைப்பின்படி, பெரும்பான்மை பெற்றுள்ள கட்சிக்கு அரசமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தான், திமுக கூட்டணியில் இருந்து நேற்று விலகி தவெக கூட்டணியில் இணைதிருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில், நாளை ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tamilnadu Governor - Vijay

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நாளை (08.05.2026) காலை 11:00 மணியளவில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.