Christopher Tilak  web
தமிழ்நாடு

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக புதுமுகம் அறிவிப்பு.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கான வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

PT WEB

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் திலக் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கி, தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதில் இவரது பங்களிப்பு பாராட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்கவராக மாறியிருக்கிறார். யார் இவர் என விரிவாக பார்க்கலாம்.

மாநிலங்களவையில் காலியாகும் 37 இடங்களுக்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் காலியாகும் 6 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒரு இடமும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கான வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

KC Venugopal

திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறையினரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரது தாத்தா தேயிலை தொழிலாளி, இவரது தந்தை குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். கிறிஸ்டோபர் திலக், எஞ்சினியரிங் மற்றும் MBA முடித்து விட்டு, கார்ப்பரேட்டில் வேலை செய்து வந்தார். தனது 30வயதிற்கு மேல் வேலை எல்லாம் விட்டுவிட்டு பொது வாழ்வில் காங்கிரஸ் கட்சியுடன் பயணிக்கிறார்

Christopher Tilak with Manipur congress Committee

கட்சியின் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கி, இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளார். தற்போது இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக (In-charge) நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். மணிப்பூர் போன்ற பதற்றமான சூழல் நிலவும் மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

Christopher Tilak with Rahul Gandhi

ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள் பட்டியலில் கிறிஸ்டோபர் திலக் இடம்பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் அவர் ஆற்றிய கடினமான பணிக்கான வெகுமதியாக இந்த மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் என்பதாலும் இவரது தேர்வு கட்சிக்குச் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை ஒரு புதிய முகமான ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.