திருமாவளவன், ஸ்டாலின், ஆ.ராசா web
தமிழ்நாடு

ஆ.ராசாவின் விமர்சனம் எதிரொலி.. காட்டமாக விமர்சித்த விசிக.. ஆட்டம் காணும் திமுக கூட்டணி!

திமுக எம்.பி ஆ.ராசாவின் கருத்தால் தமிழக அரசியல் களத்தில் திமுக-விசிக இடையே மோதல் உருவாகியுள்ளது.

PT WEB

திமுக கூட்டணியில் இருந்து விசிக, IUML வெளியேறி தவெக அரசில் இணைந்தது, கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆ.ராசா சமூக வலைத்தளத்தில் விசிக மீது கடுமையாக விமர்சித்தது, விசிக நிர்வாகிகள் மற்றும் அதிகாரப்பூர்வ பக்கம் காட்டமாக பதிலடி கொடுத்தது, காங்கிரஸ்-பாஜக கூட்டணி வரலாறு வரை இழுத்து விமர்சனங்கள் எழுந்தன. இதனால் திமுக-விசிக உறவு முறிவு, கூட்டணி அரசியலில் புதிய சமநிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் IUML ஆகிய கட்சிகள் இணைந்தே பயணித்து வந்தன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவர்கள் திமுக கூட்டணியில் இணைந்தே தேர்தலை சந்தித்தன.

அதுவரை இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணியாக மட்டுமே இருந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. முதல் முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கிய விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தவெகவுடன் கைகோர்த்தது.

திருமாவளவன் - ஸ்டாலின்

அதன் பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் விசிக, இடதுசாரிகள், IUML ஆகிய கட்சிகள் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதாக அறிவித்தன. தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம்வழங்கப்பட்ட நிலையில், தற்போது விசிக மற்றும் IUML ஆகிய கட்சிகளும் தவெக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துள்ளன.

இதன் மூலம் திமுக கூட்டணியில் இருந்து விசிக, IUML ஆகிய கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் இந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பரிமாறிக்கொண்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசாவின் காட்டமான விமர்சனம்..

எம்.பியும், திமுக துணைப்பொதுச்செயலாளராருமான ஆ.ராசா தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு ஆதரவாகிவிட்டதாக கூறியதோடு தவறான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியும் விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.

தொடர்ந்து " என் வீட்டுத் தோட்டத்துத்

தென்னை

கூனி வளைந்து

எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்

அதற்குப் பெயர்

”முடத்தெங்கு”!

அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?" என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த விசிக துணை பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்

"அதிகாரம் எளியவர்க்கு, அதிலென்ன ஆத்திரம்?

ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது!

அமைதியாய் கடப்பது அநாகரிகம் தவிர்க்கவே!

அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால்... அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்!" என்று கூறியிருந்தார்.

அதேநேரம், தனது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றியை இந்தத் தருணத்தில் பதிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்வியின்போதுகூட கலங்காத தனது மனம் இதை எழுதும்போது நன்றியில் கரைவதாகவும், இந்த நன்றியை பதிவு செய்வது தனது அரசியல் வாழ்வின் குறைந்தபட்ச அறம் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம், விசிகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும், " காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, பிறகு அதே பாஜகவை எதிர்த்த 'சுயநல சாணக்கியத்தனம்' யாருடையது?இது போன்ற பல அரசியல் நாடகங்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது...

கொள்கைக்காகக் கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை... அதற்குள் ஏன் இந்த எரிச்சல்?

ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! " என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

ஆ.ராசாவின் கருத்துக்கு கண்டங்கள் வலுக்கும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் "புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு, ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்" என்று கூறியுள்ளார்.