சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. தவெகவினரை தாக்கிய விவகாரத்தில் நடவடிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் 59 இடங்களிலேயே வெற்றி பெற்று திமுக இரண்டாவது இடத்திற்கு சென்றிருக்கிறது. கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் 3 மாதங்களே ஆன தவெகவின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். சென்னை திமுகவின் கோட்டை என கூறிவந்த நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 14-ல் தவெக வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் முதல்வரின் சேப்பாக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் ஆகிய தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருந்ததுடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தோல்வியைச் சந்தித்து இருந்தது.
இந்தசூழலில் தான், சென்னையில் இருந்த சேகர்பாபுவின் அதிகப்படியான ஆதிக்கமே அந்த மண்டலத்தில் திமுகவின் மோசமான தோல்விக்கு காரணம் என திமுகவைச் சேர்ந்த பலரே குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், தேர்தலின்போது துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் தரப்புக்கும், அத்தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபு தரப்புக்கும் அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்திருந்தன. குறிப்பாக, வாக்குப்பதிவு நாளன்று துறைமுகம் தவெக வேட்பாளர் சினோரா அசோக் உள்ளிட்ட சிலரை தாக்கியதாக சேகர் பாபு மீது புகார் எழுந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தசூழலில் தான், முன்னாள் அமைச்சரும் தற்போதைய துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சேகர்பாபு மீது தவெக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமாரை தாக்கிய விவகாரத்தில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

