கோவை நுகர்வோர் நீதிமன்றம்
கோவை நுகர்வோர் நீதிமன்றம்  file image
தமிழ்நாடு

உணவு பார்சலுக்கு கட்டணம் வசூலித்த பிரபல உணவகத்திற்கு அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

PT WEB

கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது (34). இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2022-ல் ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில், பிரைடு ரைஸ் உணவு வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.160 ஆக இருந்த நிலையில்,  பார்சல் செய்து கொடுப்பதற்கு ரூ.5.71 கூடுதலாக கட்டணம் வசூல் செய்துள்ளனர். அந்த பார்சலில் உணவகத்தின் பெயர் (LOGO) இடம் பெற்றிருந்தது.

பார்சல்

உணவு பார்சல் கொடுத்ததற்குக் கட்டணம் வசூல் செய்த நிலையில், அதில் உள்ள அவர்களது நிறுவன லோகோ மூலம் தன்னை விளம்பர ஏஜென்டாகவும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகக்கூறி இது தொடர்பாக விளக்கம் கேட்டும் சேக் முகமது அந்த தனியார் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார் சேக் முகமது. இதற்கு அந்நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்காததால், சேக் முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்தார்.

கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த தனியார் உணவகம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பார்சலில் உணவகத்தின் லோகோவை பயன்படுத்தக் கூடாது என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் வாடிக்கையாளரான சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ,10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவீனம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சேக் முகமது

பெரும்பாலான உணவகங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பார்சல் கொடுக்கும் பைகளில் விளம்பரமாகக்  கொடுப்பதோடு, அதற்காக பார்சல் கட்டணமாக ஒரு தொகையையும் வாடிக்கையாளரிடம் வசூல் செய்கிறது. அப்படியிருக்க இப்படியொரு தீர்ப்பு வந்திருப்பது, முக்கியமான விழிப்புணர்வாக உணவகங்களுக்கு அமைந்துள்ளது!