செய்தியாளர் : பிரவீண்
கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் வீடு கட்டி வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சங்கனூர் ஓடையில் தேங்கியிருந்த சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஓடையில் இருந்த சாக்கடை மண் அகற்றப்பட்டிருந்த நிலையில், மண்ணரிப்பு காரணமாக நேற்று (20/01/2025) சுரேஷின் மாடி வீடு சங்கனூர் ஓடைக்குள் சரிந்து விழுந்து தரை மட்டமானது.
நல்வாய்ப்பாக சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில தினங்களாக அந்த வீட்டில் வசிக்காமல் வேறு இடத்தில் இருந்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வீட்டில் விரிசல் ஏற்பட்டவுடன் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், யாரையும் அந்த பக்கம் போக விடாமல் தடுத்து நிறுத்தி இருந்தனர். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் மாடி வீடு அப்பகுதி மக்கள் கண்முன்னே சரிந்து விழுந்தது.
அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமடைந்தது. இந்த காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் செல்ஃபோன்களில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “சங்கனூர் ஓடையின் இருபுறமும் காங்கிரீட் சுவர் அமைத்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பே ஓடைக்கரையோரம் இருப்பவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை காலி செய்ய அறிவுறுத்திவிட்டோம். தற்போது 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு காங்கிரிட் சுவருடன் கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.