mk stalin - CM Vijay web
தமிழ்நாடு

”100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தது திமுக அல்ல..” ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!

100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக மக்களுக்கு கொடுத்தது திமுக அல்ல என்று ஸ்டாலினை முதல்வர் விமர்சித்து பேசினார்.

Rishan Vengai

தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், திருச்சியில் நடந்த நன்றி கூட்டத்தில், 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் கௌரவம் திமுகக்கு அல்ல, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கே சொந்தம் என கூறினார். டாஸ்மாக் ஊழல் கோப்புகளை மூட திமுக அரசு அலைந்தது என்றும், தற்போதைய 200 யூனிட் திட்டத்தை விமர்சிப்பவர்கள் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

CM Vijay

இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக எம்.பி.துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார்.

அப்போது நிகழ்ச்சி திடலில் பேசிய முதல்வர் விஜய், 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை, அது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளித்தார்.

தமிழகத்தில் தற்போதிருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டமானது 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

விஜய்

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேரத்லில் 134 இடங்களை வென்று அதிமுகவே மீண்டும் ஆட்சியமைத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது தான் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அமலுக்கு கொண்டுவாந்தார்.

தமிழக அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரத் திட்டத்தை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த அவர், ஏற்கனவே இருந்த 100 யூனிட்டை வழங்கியது திமுக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பதவி இழந்த விரக்தியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்றும், கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மூலம் முறைகேடாகச் சம்பாதித்த ஊழல் கோப்புகளை மூடுவதற்கே அவர்கள் அலைந்தார்கள் என்றும் விஜய் கடுமையாகச் சாடினார்.

இதன் மூலம், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரான விஜய், கடந்த கால இலவச மின்சாரத் திட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.