தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“எரியுதுடி மாலா, Fan-ஐ போடுன்னு கதறுவாங்க”- வடிவேலு வசனத்தை கூறி பாஜகவை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெ.நிவேதா

2024 மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை அனல் பறக்கிறது. தலைவர்கள் தமிழகமெங்கும் சூறாவளிப் பிரசாரம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நாம் பார்த்துள்ளோம். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் காலம் கணிந்து வருகிறது. இந்தியா கூட்டணி மேல் மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதையெல்லாம் பொறுக்க முடியாத ஒருவர், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவருகிறார். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர்கள் கூட சொல்ல முடியாத பொய்களையெல்லாம் அவர் சொல்லி வருகிறார். அவர் எடப்பாடி பழனிசாமி. அவர் சொல்லும் பொய் என்னவெனில், அவர் உழைப்பால் உயர்ந்தவராம். இதையெல்லாம் புயல் காற்றில் பொரி கடலை சாப்பிடுபவரிடம் சொல்லுங்கள்.

திமுக ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்டதென பேசியிருக்கிறார் பழனிசாமி. நீதியரசர் குன்ஹாவின் தீர்ப்பை வாசியுங்கள். உங்கள் கட்சியின் வரலாறு என்னவென அப்போது தெரியும். ஒரு குடும்பத்துக்கே கொத்தடிமையாக இருந்து, அடிமை சேவை செய்த வரலாறுதான் அதிமுக-வுடையது.

1976-ல் எமெர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போட்டதற்காகவும், 1991-ல் இலங்கை தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காகவும்தான் திமுக அரசு கலைக்கப்பட்டது. இது தெரியாமல் உளறுகிறார் பழனிசாமி. கொஞ்சம் நாவடக்கத்துடன் பேசுங்கள்.

பாஜக-வை பொறுத்தவரை தேர்தல் பத்திர ஊழல் மூலம் உலகளவில் இந்தியாவிற்கு அழிக்க முடியாத அவமானத்தை கொடுத்துள்ளது . பாஜக-வின் திட்டங்கள் மிகவும் மோசமானது, ஆபத்தானது.

பாஜகவினர் பண்பாட்டு தாக்குதல் நடத்துவார்கள். ஊழல், குடும்ப அரசியல், கச்சத்தீவு என அரசியல் களத்தை பாஜக-வினர் திசைதிருப்பி வருகின்றனர். ஊழல் வழக்கில் சிக்கி பாஜகவில் சேர்ந்தவர்களை பிரதமர் காப்பாற்றியது பற்றிகூட செய்தி வெளியானது.

2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். முன்பெல்லாம் அத்திபூத்தார்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர்.

இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. ‘இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே’ என நினைக்கிறார்கள். ‘எரியுதுடி மாலா... அந்த ஃபேனை போடு’என கதறுவார்கள்.

இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம் குழந்தைங்கள் படித்து வேலைக்கு போவதை கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார்கள். அப்படியானவர்கள்கூடதான் பாமக இணைந்துள்ளது. மனசாட்சி உள்ள பாமக-வின் தொண்டர்களே இதை ஏற்கமுடியாமல் உள்ளனர்” என்றார்.