ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக கூறி, அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலுன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இத்தோடு திமுக ஆட்சி காலத்தில் தொழில்துறை முன்னேற்றம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் முதல்வர்.

இதுகுறித்த தன் பதிவில் முதல்வர், “கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!

TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர் / பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.

இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.