கொடுங்கையூர் காவல் நிலையம் முன் குவிந்த நபர்கள்
கொடுங்கையூர் காவல் நிலையம் முன் குவிந்த நபர்கள் pt desk
தமிழ்நாடு

திமுக - மனிதநேய மக்கள் கட்சியினரிடையே மோதல்... காவல்நிலையத்தில் வாக்குவாதம் - என்ன நடந்தது?

webteam

செய்தியாளர்: J.அன்பரசன்

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பார்த்தசாரதி ரெட்டி தெருவில், திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களின் பயன்பெறும் படிவங்கள் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டன. திமுகவை சேர்ந்த இரண்டு பெண்கள் வீடு வீடாக சென்று படிவத்தை பூர்த்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மனித நேயம் மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி அஸ்லாம் என்பவரின் வீட்டில் படிவத்தை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்ட போது பெண்களிடம் ஆபாசமாக பேசி பிரச்னை செய்து படிவத்தை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

Aslam

இதனால் ஆத்திரமடைந்த திமுக 35வது வட்ட செயலாளர் ஹரிதாஸ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அஸ்லாம் வீட்டிற்கு சென்று தகராறு செய்து இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அஸ்லாமிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு திமுக நிர்வாகியை அழைத்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. காவல் நிலையத்திலேயே இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

கொடுங்கையூர் காவல் நிலையம்

இதைத் தொடர்ந்து காவல்துறையினர், இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில், நேற்றிரவு திமுக நிர்வாகி ஹரிதாஸை கைது செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் காவல் நிலையம் முன்பு கூடியிருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இருதரப்பும் மாறி மாறி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருதரப்பு மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.