மாணவி விபரீத முடிவு pt desk
தமிழ்நாடு

சென்னை | சித்தியின் சித்ரவதை - மன உளைச்சலில் 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் எலிகன் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத். தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வரும் இவருக்கு, சங்கீதா என்ற மனைவியும், பிரிதிஷா (21), நந்தினி (17) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் நந்தினி எம்.எச் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா பிரிந்து சென்ற நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமர்நாத், மாற்றுத்திறனாளி பெண்ணான உஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அமர்நாத் அவரது மகள்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், சித்தி உஷா, திருமணம் ஆன நாளில் இருந்து நந்தினியை அடித்து வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமை படுத்தி வந்தாகக் கூறப்படுகிறது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட நந்தினி, இது குறித்து தனது தந்தை அமர்நாத்திடம் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், எந்த பயனும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. நாளுக்கு நாள் சித்தியின் கொடுமை அதிகரித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நந்தினி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் மாணவியை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், நந்தினியின் உறவினர் நிர்மல் குமார் என்பவர் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.