சென்னை மாநகரத்தின் முதல் பொதுப்போக்குவரத்து முறை ட்ராம் ஆகும். 1874இல் குதிரைகள் ஓட்டிய ட்ராம் பயன்பாட்டுக்கு வந்தது. முதல் ட்ராம் ராயபுரம் - திருவல்லிக்கேணி இடையே இயங்கியது. 1895 முதல் மின்சார ட்ராம்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதன் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர்கள் மட்டுமே. முதல் மின்சார டிராம் எழும்பூர் - பச்சையப்பா கல்லூரி இடையே இயங்கியது. இந்தியாவிலேயே முதல் மின்சார டிராம் சேவை அளிக்கப்பட்ட நகரம் சென்னை. இன்று சென்னையின் பிரதான பொதுப்போக்குவரத்து முறைகளில் ஒன்றாக உள்ள பேருந்துகள் 1925 முதல் ஓடத் தொடங்கின.
சென்னையின் மற்றொரு உயிர்நாடி போக்குவரத்து முறையாக உள்ள புறநகர ரயில்கள் 1931 முதல் ஓடத்தொடங்கின. முதல் புறநகர் ரயில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஓடியது. சுமார் 60 ஆண்டுகள் சென்னையின் குறுக்கும் நெடுக்கும் ஓடிய டிராம்களின் ஆதிக்கம் 1953ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த கட்ட வளர்ச்சியாக பறக்கும் ரயில்கள் எனப்படும் எம்ஆர்டிஎஸ் ரயில்கள் 1995இல் அறிமுகமாகின.
முதல் எம்ஆர்டிஎஸ் ரயில் சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே ஓடியது. சென்னையில் மூலைமுடுக்கெங்கும் மக்கள் பயணிக்கும் வகையில் மினி பஸ்கள் 2013 முதல் அறிமுகம் செய்யப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் முதல் மெட்ரோ ரயில் சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே இயங்கியது. பேருந்துகள், புறநகர் ரயில், மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து முறைகள் மூலம் தினசரி 40 லட்சம் பேர் பயணிக்கின்றனர். அடுத்த கட்ட வளர்ச்சியாக வாட்டர் டேக்ஸி போன்ற பொதுப்போக்குவரத்து முறைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.